Monday, July 06, 2009

நாடோடிகள்-ஜாக்சன் அப்படியே ஆயிரத்தில் ஒருவன்

நாடோடிகள் - சுப்ரமண்யபுரம் பார்ட்- 2

விட்டேத்தியான வெட்டி ஆபிசர்கள்..அவர்களுக்கு இடையே இருக்கும் நட்பு...அவர்களுக்கு வரும் காதல்..அதனால் விளையும் கச்சேரிகள்..இப்படி தமிழகத்து நடுத்தர வர்க்கத்து இளைஞர்களின் கதை இன்னொரு முறை ஜெயித்திருக்கிறது... சுப்ரமணியபுரத்தில் பழக்கத்திற்காக கொலை செய்ய துணிகிறார்கள் என்றால்..இதில் பழக்கத்திற்காக ஊர் தாண்டி போய் வீடு புகுந்து பெண்ணைத் தூக்குகிறார்கள்...ரொம்ப நாளைக்கு அப்புறம் திரையரங்குகளில் திருவிழாக் கூட்டம்..இரவுக் காட்சி நிரம்பி இருந்தது... மக்கள் தூங்காமல் படம் பார்த்தார்கள்...முதல் பாதி ஜெட் வேகம் என்றால்...அடுத்த பாதி பெட்ரோல் தீர்ந்த பைக் வேகம்... எப்படியோ தள்ளி தள்ளி கரை சேர்கிறார்கள்...சசி குமார் தமிழகத்துக்கு கிடைத்த இன்னொரு டி.ராஜேந்தர்....அதாவது 80களில் தமிழகம் ரசித்த அந்த டீ.ஆர்.

மைக்கேல் ஜாக்சன் - பிளாக் ஆர் ஒயிட்

பொதுவா சிகரம் தொட்டவர்களின் வாழ்க்கையில் எத்தனை சுவாரஸ்யங்கள் உள்ளனவோ அவ்வளவுக்கு அவ்வளவு சிக்கலும் உள்ளது என்பதற்கு உதாரணம் மைக்கேல் ஜாக்சன்...
மொத்தம் பாடியது 60 பாடல்கள் தான்..அதன் மூலம் சம்பாதித்த சொத்துக்களுக்கோ....ரசிகர்களுக்கோ...எண்ணிக்கையில் இடமில்லை என்றே சொல்லணும்...கொட்டாம்பட்டி பஞ்சாயத்து யூனியன் ஆண்டு விழா துவங்கி...நியுயார்க் நகரத்து வீதி ஓரம் வரை இவர் பாட்டி ஒலிக்காத இடமே இல்லை..... வெற்றி படிகட்டுகளில் எந்த அளவுக்கு வேகமாய் மைக்கேல் ஏறினாரோ அதே அளவு வேகமாய் இறங்கவும் செய்தவர் மைக்கேல்...
துன்பத்தில் துவங்கி ஊருக்கெல்லாம் இன்பம் கொடுத்து தன் இன்பத்திற்கு மீண்டும் துன்பத்தையேத் தேடிக்கொண்ட மனிதர் ஜாக்சன்...

மைக்கேல் ஜாக்சன் நல்லவரா கெட்டவரா....அவர் பாடிய பாட்டு ஒண்ணு தான் ஞாபகம் வருது....பிளாக் ஆர் ஒயிட்..அவர் மனசு அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...

கோயம்புத்தூர் மாறி போச்சு..

கேரளாவுக்கு ரொம்ப பக்கம் இருப்பதாலோ என்னவோ கோவை வானிலை சேட்டன்மார்களின் ஊரை ஒத்தே இருக்கும்...ஜூன் மாதம் அங்கெல்லாம் பசங்க பள்ளிக்கு குடை பிடிச்சுட்டு போறது தான் வழக்கம்...இந்த வருசம் ஜூன் வர வேண்டிய மழை கொஞ்சம் தாமதமா ஜூலையிலே வந்து இருக்கு....சில்லுன்னு காத்து....குளுகுளுன்னு இருக்கு கோவை....கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஆகி வருசம் நாலு ஆகிப் போச்சு..நாலு வருசத்துல்ல கோவையிலே நிறைய மாற்றம் வந்துருக்கு...வாகனம் பெருத்துப் போச்சு..ஆங்காங்கே டிராப் ஜாம்...மாசு அதிகமாயிருச்சு...நின்னு நிதானமாப் பொழப்புக்குப் போன மனுசங்க எல்லாம் குறைஞ்சுப் போயிட்டாங்க..பரபரன்னு மக்கள் பறக்கிறாங்க...கோவை தன் அடையாளத்தைத் தொலைச்சுட்டு இன்னொறு சென்னையாகிடுமோன்னு லேசா பயமாயிருக்கு

கேட்கும் பாட்டு...

ஆயிரத்தில் ஒருவன் பாட்டெல்லாம் கேட்டீங்களா... கேக்க கேக்க நல்லாயிருக்கு..ஓ ஈசா..என் ஈசா தான் நம்ம சாய்ஸ்...படத்து நாயகி ஆன்டிரியா தான் பாட்டுக்கும் நாயகி..ஏற்கனவே பாடியிருக்காங்களாம்...மாலை நேரத்து மயக்கம் பாட்டு வாலிப தேசத்து ஏக்க வரிகள்... தனுசும் அவங்க வீட்டுகாரம்மாவும் கூட சேர்ந்து பாடி இருக்காங்க...ஆச ஆசன்னு ஒரு பாட்டு...
வைரமுத்து செல்வாவுக்கு இது முதல் கூட்டணி.... அகதி வாழ்க்கை பற்றிய வரிகள் மனத்தைப் பிழியுது...அதுவும் விஜய் யேசுதாஸ் குரல்..அப்படியே அவங்க அப்பா குரலை ஒத்துப் போவுது ..

ஆயிரத்தில் ஒருவன்...ரசனையான இசை விருந்து...

படித்ததில் பிடித்தது

எப்பொழுதும் என் இதயத்தில் இருந்து கொண்டு
வேதனை செய்கிறாள் இவள்
ரகசியமாகச் செய்த பாவத்தைப் போல

நன்றி கவிக்கோ அப்துல் ரகுமான் ( அவளுக்கு நிலா என்று பெயர்)

tamil10