சமீபத்தில் தம்பி வெட்டி பயலின் பதிவு ஒன்று படித்தேன்... சரத்பாபுவை தென்சென்னை வேட்பாளராக பத்திரிக்கைகளும் இணைய நண்பர்களும் கொண்டாடுவதைக் குறித்த தன் கேள்விகளை எழுப்பியிருந்தார்....
பொதுவாக படித்த நமக்கிருக்கும் அதே ஒரு மனநிலை தான் அவர் பதிவிலே எனக்குத் தெரிந்தது....படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது நம் அனைவரின் ஆவல்...படித்தவர்கள் என இங்கு நாம் குறிப்பிடுவது மெத்த படித்த மேதைகள்...படிக்காத மேதைகளும் நாட்டில் இல்லாமல் இல்லை.. ஆனால் படித்தவன் என்று நாம் அடிக்கடி நாம் குறிப்பிடுவது ஒரு சாதரண மத்தியத் தர குடும்பத்தில் இருந்து படிப்பை மட்டும் தன் வாழ்க்கையின் மூலதனமாகக் கொண்டு வரும் சாமன்ய மனிதர்களை தான் என்பது தான்.... நம் நாட்டில் இதற்கு முன் அரசியலுக்கு படித்தவர்கள் வரவில்லையா என்ன.... மருத்துவர்கள் அய்யாக்கள்... சின்ன அய்யாக்கள்..வக்கீல்கள்.... பொறியாளர்கள்... இன்னும் எத்தனையோ மேதாவிகள் வந்துள்ளனர்...ஆனாலும் சரத்பாபு போன்றவர்கள் வரும் போது நாம் ஆதரிக்க முனைவது ஏன்.... அவர் நம்மைப் போன்றவர்.. படிப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை எதிர்கொண்டவர்... அதன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை ஏறப்டுத்திக் கொண்டவர்
அப்துல் கலாம் அரசியல் களம் கண்ட போதும்.. மன்மோகன் சிங் அரசியல் வலம் வந்த போதும் நாம் அடைந்த அதே ஒரு திருப்தி தான் சரத்பாபு விஷ்யத்திலும் நடக்கிறது...
இந்த நாடு ஒரு நல்ல தலைவனுக்காக ஏங்குகிறது....ஆனால் நம்மிடையே தலைவர் வேடமிட்டு வருபவர்கள் அனைவரும் அரசியல் வியாபாரிகள்...இரண்டு லட்சம் ஓட்டு இருக்கும் தொகுதியில் எப்படி மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்லலாம் என கணக்கு போடுபவர்கள்...முடிந்தால் தேர்தல் கமிஷனுக்கே கமிஷன் கொடுத்து காரியம் சாதிக்க முயலும் ஓட்டு பிரோக்கர்கள்...கரன்சி நோட்டுக்கள் மூலம் ஜனநாயக கற்பை களவாடும் களவாணிகள்..தேர்தல் என்பது அவர்களைப் அவர்களுக்கு பிட் அடித்தாவது பாஸ் ஆக வேண்டிய அரசியல் தேர்வு மட்டுமே...
வீடு...குடும்பம்..வேலை..என நாட்டுக்குள் வாழும் ஒவ்வொரு சாதரண குடிமகனும் தன்னளவில் சுருங்கி தன் பொருளாதார தேடுதலில் தொலைந்து நின்றாலும் தன் நாடு தன் மக்கள் என்னும் எண்ணங்கள் அவன் அளவில் என்றுமே உண்டு.. தான் சம்பாதிக்கும் பணம் தன் வீடு சேர்க்கும் முன்னே அரசாங்க கஜானாவில் வரியாக செலுத்தி வீடு போகும் மக்கள் ஏராளம்.. அவர்கள் அனைவரிடமும் இருக்கும் ஒரே மூலதனம் படிப்பு மட்டுமே...
வெளிநாடுகளையும் அங்கிருக்கும் வளர்ச்சியையும் காணும் இந்த மக்கள் தங்கள் நாடு இப்படி ஆகாதா என ஏக்கம் கொள்வதும்...அது இதுவரை ஒரு நிறைவேறாத கனவாகவே தலைமுறைகள் தாண்டியும் தொடர்வதுமாய் இருப்பது என்னக் கொடுமை...
நம் இனத் தலைவர்களும்...புரட்சி பட்டத் தலைவர்களும் செய்வது என்ன...
சாதனையா.... ஒரு ரூபாய்க்கு அரிசி.....கலர் டிவி.....ஒரு ஆட்சி போய் மறு ஆட்சி வந்தால் சிலை மாற்றம்... இதனால் மொத்த மக்களுக்கும் ஏமாற்றம்..
ஒரு தலைவனாவது.... அட இன்னும் இரண்டு படி அரிசி நம்ம ஊர்ல்ல அதிகமா விளையுறதுக்கு ஒரு திட்டம் போட்டிருக்கானா....இஸ்ரேல் இப்போவும் பண்ணுறான் விவசாய புரட்சி...இங்கே பட்டத்துல்ல மட்டுமே ஒட்டிகிட்டு இருக்கு புரட்சி.... கலர் டிவி கொடுக்குறாங்க அப்படியே அவங்க குடும்ப மக்களே டிசைன் டிசைனா டிவி ஆரம்பிச்சுக்குறாங்க... அவங்க டிவி சேனலை பார்க்க கூட்டம் சேர்க்க ஒரு வழியா இதுன்னு யோசிக்கத் தோணுது.....தமிழ் பேசுற ஒரு கூட்டத்துக்கே சங்கொலி ஊதுறாங்க அங்கே..இங்கே சிரிப்பொலின்னு டிவி ஆரம்பிச்சு பக்காவா எதிரொலி கொடுக்குறாங்க நம்ம இனமான தலைவர்கள்
ஐடியிலே அடி.... அத்தனை பேருக்கு வேலை போவுது....அப்படின்னா அதை நம்பி இருக்கும் நம்ம இந்திய பொருளாதாரம் என்னவாகும்....அதைப் பத்தி பேசக் கூட ஒரு தலைவன் இல்ல... படிச்சவங்க பிரச்சனை... சம்பாதிக்கும் போது சம்பாதிக்கட்டும் இப்போ எப்படியோ போகட்டும்ன்னு விட்டுட்டாங்களோ என்னவோ...
எத்தனை நாள் தான் வெறும் சின்னம் பாத்து ஓட்டு போடணும்... சூரியன்..இலை....கை...இப்படின்னு...கழுதையை நிறுத்துன்னாலும் சில சின்னங்களில் ஜெயிக்கலாம் என்பது நம்ம ஊரில் அபத்த நிலை...
கழகங்களின் கபடி ஆட்டம்...கூட்டணி என்ற பேரில் நடக்கும் அரசியல் பங்கு சந்தை ஏற்ற இறக்கங்கள்... சாமன்ய மனிதனை அரசியலை விட்டு தூரமாய் நிறுத்தி வைத்து தேர்தல் வரும் போது மட்டும் உற்சவ மூர்த்திகளாக வலம் விட்டு பின் அவர்களை பூட்டி வைக்கும் அவலங்கள்...
இப்படி அரசியல் பற்றி சொல்ல முடிந்த கருத்துக்கள் கொஞ்சம்...சொல்ல முடியாத கருத்துக்களும் கோபங்களும் அனேகம்... இப்படி பொழுதையும் பொழப்பையும் கடத்தும் சாமான்ய மக்கள் தங்களை போல யாராவது ஒருத்தர் இந்த கழகங்கள்...அவர தம் கூட்டணி கும்ப்லகளை எதிர்கொள்ள களம் காணும் போது.. நம்மைப் போல் ஒருவன்... என்னும் அடிப்படை எண்ணம் அவனை ஆதரிக்கத் தூண்டுகிறது....
நம்மிடத்தில் இருந்து போகும் இவன் நம் கனவுகளின் பிரதினிதி என்ற ஒரு எதிர்பார்ப்பு...நம்பிக்கை....இது வரை போராடி வாழ்க்கையில் வென்றவன்.. இந்தப் போராட்த்திலும் நிச்சயம் நல்வழி கண்டு வெல்லுவான்
இது ஒரு ஆரம்பம்....நமக்கும் மாற்று உண்டு... அந்த மாற்று நம்மை மாதிரி தொழில் முறை அரசியல்வாதியாக இல்லாமல் மக்களில் இருக்கும் ஒருவனாகவும் இருக்க வாய்ப்புண்டு என்பதை இன்றைய தமிழ் அரசியல் நிறுவன அதிபர்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது...
அந்த கருத்தை வலிமையாகவும் உரக்கவும் சொல்ல ஒரு படித்த...தன் படிப்பை மூலதனமாக கொண்டு நாட்டுப் பணி செய்ய கிளம்பியுள்ள சரத்பாவுக்கு வாக்களிப்பதில் என்ன தவறு இருக்கிறது.....
தம்பி வெட்டி சரத்பாபுவின் தகுதி பற்றி மட்டும் கொதிப்பது போல் தமிழகத்தில் கழகங்களும் அவர் கூட்டணி கட்சிகளும் நிறுத்தியுள்ள ஒவ்வொரு வேட்பாளரின் தகுதி பற்றியும் சேர்த்து கொதித்து பொங்குவதே மிகச் சரியான நியாயமாக இருக்கும் என எனக்கு படுகிறது....
கண்மூடித்தனமாய் ஆதரிக்காமல் நம் கேள்விகளுக்கு விளக்கம் பெற்று அவர் தம் கொள்கையில் தெளிவு பெற்று நல்ல வேட்பாளர்களை ஆதரிப்போம்.. டெல்லி அனுப்புவோம்..